என்னை விட்டு ஓடிப்போக முடியுமா

உயிர் வாழ மூளை அவசியமில்லை என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறார் பிரபல நரம்பியல் துறைப் பேராசிரியர், லிசா பேரட் (Lisa Feldman Barret). மன்னிக்கவும். நான் அரசியல்வாதிகளைக் குறிப்பிடவில்லை என்று கிண்டல் வேறு.

ஏட்டின் பேர் : Seven & A Half Lessons. நம்மைப் போல் சாதா மனிதர்களுக்காக மூளை பற்றி இன்றைய ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பதை யாருமே எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மொழிநடையில் எழுதி இருக்கிறார் – சுருக்கமாக.

ஏழு பாடங்கள் மூலம் (ஏழு கட்டுரைகளில்) விளக்கங்கள் வருகின்றன. இருந்தும் அதென்ன முழுசாக இல்லாமல் அரைப் பாடம்? மூளை எப்படித் தோன்றியிருக்கும், தொடக்க கால மூளை எப்படி இருந்திருக்கும் என்று இன்றைய உயிரியல் நோக்கில், செய்திகளை அந்த அரைக்குள் அடக்கியிருக்கிறார் அவர்.

அந்த அரை : அம்பியோக்சஸ் amphioxus எனும் கடல் வாழ் உயிரினத்தில் இருந்து மூளையின் தோற்றம் துவங்குகிறது. சுமார் 550 மில்லியன் ஆண்டுகளின் முன்னே இவை கடலில் வாழ்ந்திருக்கின்றன. இன்றும் வாழ்கின்றன. ஒரு வாய். ஒரு வயிறு. இவ்வளவு தான் இந்த உயிரின் உடல். வாயைத் திறந்தபடி கடலின் ஆழத்தில் அருகில் வருகின்ற அல்லது கடந்து போகின்ற நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன.

தண்ணீரின் அசைவுகளை உணர்கின்றன. இருட்டை அல்லது வெளிச்சத்தை அறிந்து கொள்கின்றன. இத்தனைக்கும் மூளை என்பதே கிடையாது. இந்த உயிரினத்தின் படிநிலை வளர்ச்சியில் இருந்து தான் மூளை என்கிற உறுப்பு தோன்றி இருக்கவேண்டும் என்று உயிரியலாளர்கள் நம்புகிறார்கள்.

உயிர் வாழ்வதென்றால் சக்தி தேவைப்படுகிறது. சக்தி கிடைக்க உணவு தேவைப்படுகிறது. பிறகு இன்னொரு உயிருக்கு இரையாகாமல் தப்பித்து வாழ பிழைப்புத் திறன் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் ஒரு உயிர் அதன் சக்தியைக் கொண்டு புத்திசாலித்தனமாக உபயோகிக்க வேண்டிய அவசியம் நேர்கிறது.

ஒரு உயிரின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில் அதற்கு நன்மை விளைகிறதா தீமை விளைகிறதா? எதை அடிக்கடி உபயோகிக்கலாம்? எதை நிறுத்தலாம்? அடுத்த கணம் வாழ்க்கை இருக்குமோ இல்லையோ தெரியாது. அதற்கு முன் என் அடுத்த சந்ததியைத் தயார் பண்ண வேண்டுமே.

ஒரே சமயத்தில் எக்கச்சக்கமான தகவல்கள் வெளி உலகத்தில் இருந்து வருகின்றன. அதில் நல்லது கெட்டதை வடிகட்டி எனக்கு ஒவ்வொரு கணமும் சொல்லிக் கொண்டே இருக்க ஒரு உதவி வேண்டுமே.

ஒவ்வொரு உயிரையும் முடிந்தளவு வாழ வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே மூளை செய்கிறது. அன்பு, பாசம், புரிந்துணர்வு, படைப்பாற்றல், கோபம், கொலை வெறி.. என்று எந்த உணர்வும் அதற்கு இல்லை.

மேலே சொல்லப்பட்ட கசாமுசாக்களை அது கைவசம் வைத்திருக்கிறது. எப்பெப்போ எது தேவையோ அப்பப்போ அதை அள்ளி வீசுகிறது. மற்றும்படி, இந்தக் கண்ராவிகளில் அது சிக்குவதில்லை. உங்களை வாழ வைப்பது மட்டுமே அதன் குறிக்கோள்.

வாழ்க்கை என்கிற விளையாட்டில் ஒவ்வொரு காயாக அது நகர்த்துகிறது. நாம் நகர்கிறோம். விளையாட்டு முடியும்போது அதுவும் மடிந்து போகிறது. முற்றுப் புள்ளி.

நீ ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன் பாடச் சொன்னாலும்

மூளை பற்றி தத்துவஞானி பிளாட்டோ சொன்னதெல்லாம் சரி சரி என்று 20 ம் நூற்றாண்டு வரை நம்பிக்கொண்டிருந்தார்கள் அறிஞர்கள். அய்யா சொன்னார் : மூளை மூன்று மாடிகள் கொண்டது. பசி, பாலுணர்வு போன்ற மிக அடிப்படை உணர்வுகள் கீழ்த் தளத்தில் இருக்க, அடுத்த மாடியில் மகிழ்ச்சி, பயம் போன்ற உணர்வுகள் இருக்கின்றன. உச்சியில் இருப்பது பகுத்தறியும் உணர்வு.

அறிவியலின் வளர்ச்சியில் 1990 களுக்குப் பிறகு இந்தக் கொள்கை அம்புலிமாமா கதையாகிப் போனது.

இனி இன்றைய நிலவரம் : நியூரான்கள் தான் மூளையின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. இவை நமக்கும் பொது. விலங்குகளுக்கும் பொது. இருந்தாலும் நாம் உயிரணுக்களில் (cells) வேறுபடுகிறோம்.

ஒரு எடுத்துக்காட்டு : எலிகளின் கண்களில் ஒரு தொகுதி உயிரணுக்கள் மட்டுமே இருக்க, மனிதர்களின் மூளையிலோ நான்கு தொகுதிகள். இதிலிருந்து என்ன தெரிகிறது? படிநிலை வளர்ச்சிக் கோட்பாட்டின்படி, மிச்ச மூன்று தொகுதிகளும் பின்னால் உருவாகி இருக்கின்றன. அதாவது நமக்கும் எலிகளுக்கும் பொதுவான ஒரு தாய்க்குலம் இருந்திருக்கிறது. அதாவது சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே…

மூலக்கூறு மரபியல் (Molicular Genetics) இன்றைய ஆய்வாளர்களுக்கு ரொம்பவும் கை கொடுப்பது தெரிந்ததே. என் மூளைக்கும் எலி மூளைக்கும் என்ன வேறுபாடு? எல்லாம் காலம். என் நியூரான்களுக்கு ஆயுள் கெட்டி. எலி நியூரான்களுக்கோ அது கம்மி.

மனிதர்களின் மூளை பெருசு என்கிறார்களே. அதனால் தான்… என்று கொஞ்சம் இழுத்தால்… அப்படி எந்த முட்டாள் சொன்னான் என்று திருப்பிக் கேட்கிறார் பேராசிரியர்.

மனிதர்களால் ராக்கெட்டுகள் ஏவ முடியும். சந்திரனில் போய் இறங்க முடியும். செவ்வாய்க்குப் போகத் திட்டங்கள் தீட்ட முடியும். ஆனால் இங்கே பூமியில் கேவலம் ஒரு பத்தடியாவது பறந்து காட்ட முடியுமா? தன் எடையை விட 50 மடங்கு பாரத்தை ஒரு எறும்பு போல சும்மா அலேக்காக தூக்கிக் காட்ட முடியுமா? ஒரு பூனை போல இருட்டில் பார்க்க முடியுமா?…

ஒவ்வொரு உயிரினமும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல தன்னை மாற்றிக் கொண்டுள்ளதே தவிர (adapted) வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என்கிறார் அவர்.

தண்ணீர், உப்பு, குளுக்கோஸ்.. போன்றவை எந்தளவுக்கு உடலுக்குத் தேவை? சக்தியை எப்படி சிக்கனமாகச் செலவழிக்கலாம்? எல்லா உயிரினங்களின் மூளையிலும் பகுத்தறியும் உணர்வுகள் (rationality) இருக்கின்றன.

ஒரு ஆபத்து வரும் போல் தெரிகிறது. இடத்தை விட்டு ஓடுவதா இல்லையா? ஓடு என்கிறது மூளை. சில சமயம் ஆபத்து வருவது போல் இல்லை. ஆனாலும் ஓடச் சொல்கிறது மூளை. ஏன் அது தடுமாறுகிறதா? இல்லை. என் சிக்னல் ஒழுங்காக வேலை செய்கிறதா, இல்லையா என்று நோட்டம் பார்க்கிறது.

விருப்பமே இல்லாத சில வேலைகளை செய் என்கிறது. அது நன்மையாக இருக்கலாம். ஒரு உதாரணம் : உடல் பயிற்சி. அது துன்பம் தரலாம். அதே சமயம், எதிர்காலத்தில் உங்கள் நல்வாழ்வுக்கு அந்த செயல்பாடு உதவப் போகிறதே.

மூளையின் செயல்பாடுகளில் நிச்சயம் குறைபாடுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு. சில ஆய்வாளர்கள், மூளை எந்த நேரத்திலும் எந்த முடிவுகளையும் சரியாக எடுக்க முடியாத “திரிசங்கு” நிலையில் இருப்பதாக நினைக்கிறார்கள். இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார் பேராசிரியர்.

இன்னது நடக்க வேண்டும். இன்னது நடக்கக் கூடாது… என்று பல எதிர்பார்ப்புகளை அது ஏற்கெனவே கணக்குப் போட்டு வைத்திருக்கிறது. அதற்காக மூளை தன் வளங்களை சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகவே உபயோகிப்பது கூட இப்படிப்பட்ட நோக்கங்களுக்காகத் தான் என்கிறார் அவர்.

சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்

மூளையைக் குளிர்விக்க மூளைக்குள் ஒரு அங்கம் இருப்பதாக நம்பினார் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில். மத்திய காலங்களில் வாழ்ந்த மக்கள் (Medieval Ages) மூளையின் சில பகுதிகளில் உயிர் உறைவதாக நம்பினார்கள்.

19ம் நூற்றாண்டு வரை காதல், சோகம், இன்பம்.. என்று எல்லா உணர்வுகளுக்கும் மூளையில் தனித்தனி அறைகள் இருக்கும் என்று நினைத்தார்கள்.

இன்று கூட இடது பக்க மூளை தர்க்க ரீதியானது, வலது பக்க மூளை படைப்பாற்றல் உள்ளது என்று நம்புவோர் இருக்கிறார்கள். ஏன் சில அறிவியலாளர்கள் கூட அன்பு, இரக்க சுபாவம், பொறாமை .. போன்ற பல்வேறு உணர்வுகள் மூளையின் படிநிலை வளர்ச்சியில் ஏற்பட்டவை என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இவை எல்லாம் வெறும் உருவகங்கள். நாமாக ஏற்படுத்திக் கொண்ட கற்பனைகள். மூளை கணனியே அல்ல. தவிர, அது எதையும் சேர்த்து வைப்பதில்லை என்கிறார் பேராசிரியர்.

சுமார் 128 பில்லியன் நியூரான்கள் நம் மூளையில் பின்னிப் பிணைந்து ஆனால் ஒரு சிக்கலான கட்டமைப்பாக ஒரு இணையம் போல (network) செயல்படுகின்றன. நியூரான்கள் சில வேதிப்பொருள்களை உருவாக்கி அவை மூலம் ஒன்றுடன் ஒன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

இந்த வலைப்பின்னல் 24 மணி நேரமும் விழிப்போடு இயங்குகிறது. நியூரான்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருந்து பில்லியன் அளவுக்குப் பெருகக் கூடியது.

சில நியூரான்கள் தொடர்பில் இருக்கும். சில ஸ்விட்சை அணைத்துவிட்டு ஓய்வெடுக்கும். சில நியூரான்கள் வேகமாக இயங்கும். சில மந்தமாக வேலை செய்யும். (எல்லா மூளைகளும் ஒரே மாதிரி கிண் என்று இயங்காது என்று நாம் அனுபவத்தில் அறிந்திருக்கிறோம்.)

நியூரான்களின் ஆயுள் காலத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். சில செத்துப் போய்விடும். அப்போ பிரச்னை தான். சிலரைக் கண்டதும் அடடே இவரா? தெரியுமே என்போம். ஆனால் பேர் ஞாபகத்துக்கு வராது.

நியூரான்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் செய்யக் கூடியவை. ஆனால் எல்லா விதமான வேலைகளும் அல்ல. அல்ல. கையால் ஒரு பொருளை எடுக்கிறோம். ஆனால் எடுக்க முடியவில்லை. மீண்டும் ஒரு தடவை முயற்சிக்கிறோம். ஒரே தொகுதி நியூரான்களா உதவிக்கு வருகின்றன? இல்லை. இரண்டாவது தடவையில் இன்னோர் குழு வந்து வேலை செய்கிறது. ஒவ்வோர் தடவையும் பயம் நம்மை ஆட்கொள்ளும் போதும் வேறு வேறு தொகுதிகள் செயலாற்றுகின்றன.

நியூரான் வலைப்பின்னல்கள் மிகவும் சிக்கலானவை. இந்த சிக்கல்கள் தான் மனிதர்களின் மனதில் புதுப்புது வடிவங்கள், அர்த்தங்கள் உருவாக அடித்தளம் போடுகின்றன. எந்த அளவுக்கு சிக்கல்கள் கூடுமோ அதற்கு ஏற்றபடி மனதின் செயல்திறனும் கூடுகிறது.

சகாரா பாலைவனமா இல்லை அண்டார்டிகா கண்டமா? எங்கே கொண்டே இறக்கி விட்டாலும் அந்தந்த சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்து உடனைடியாகவே செயலில் இறங்கிவிடுகிறது மூளை. ஒரு கணனியால் இதெல்லாம் முடியாது.

நமக்கு இருப்பதோ ஒரு மூளை தான். ஆனால் கடலில் வாழும் ஆக்டோபஸ் இனத்தின் உடல் முழுவதுமே நியூரான்கள் இருக்கின்றன. பறவைகள் பேசிக்கொள்கின்றன. ஆனால் மூளையால் அல்ல.

மற்ற உயிர்கள் பிறந்த சில கணங்களிலோ அல்லது சில நாட்களிலோ சுயமாகவே உணவு தேடப் பழகி விடுகின்றன. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனை எட்டி விடுகின்றன.

மனிதக் குழந்தைகளுக்கோ நீண்ட காலம் தேவை. விளையாடுவது மட்டுமே குழந்தைகளின் ஒரே நோக்கம். ஆகவே தான் வளர்ந்தவர்களை விட குழந்தைகள் எந்த மொழியையும் விரைவில் கற்றுக் கொள்கிறார்கள். மேலும் அவர்களின் உணவு, அரவணைப்பு, பாதுகாப்பு அனைத்துக்கும் பெற்றோர்கள் அவசியம் தேவை.

எல்லா உயிரினங்களும் அவை வாழும் சூழலுக்கு ஏற்றது போல் இசைவடைந்து (adapted) வாழ்கின்றன. மனிதர்களும் அதற்கு விலக்கல்ல. நாங்க தான் பெரிசு என்று மனிதர்கள் மார் தட்டிக் கொண்டால் அது அறியாமை.

தொடுவதென்ன மலர்களோ தென்றலோ

எந்த ஒரு நடப்பைப் பார்த்தாலும் அது அப்டி இருக்குமோ, இப்டி இருக்குமோ என்று மூளை முதலில் யோசிக்கிறது. பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்து இது தான் உண்மை, இது தான் உலகம், இது தான் நடந்தது, இது தான் நடக்கும் என்று நம்மை நம்ப வைக்கிறது மூளை.

சில சமயம் அது எடுத்த பல முடிவுகளை நம் முன் போட்டுவிட்டு கப்சிப் ஆகவும் இருந்துவிடும். காரணம் : 1. நியூரான்கள் வேவ்வேறு வேகங்களில் பாய்கின்றன. காரணம் : 2. முடிவுகளுக்கு வரும் முன் மூளை உடம்பின் பல அங்கங்களோடும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. சில நேரம் அது தவறான முடிவுகளுக்கும் வரலாம்.

பேராசிரியரும் புரியவில்லை என்கிறார். உதாரணமாக, தாகம் எடுக்கிறது வைத்துக் கொள்வோம். ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்ததும் உடனடியாகவே தாகம் அடங்கி விடுகிறது. ஆனால் பரிசோதனைகளின் படி, தண்ணீர் நம் ரத்தத்துடன் கலந்து உடலை மீண்டும் ஆசுவாசப் படுத்திக் கொள்ள சுமார் 20 நிமிஷமாவது தேவைப்படுகிறது. மூளை ஏன் நமக்கு அவசர அவசரமாக சீன் காட்ட வேண்டும்?

உனக்கென்ன எனக்கென்ன ரகசியம்

நாம் தனித்தனியாக வாழ்வதில்லை. ஒரு சமூகமாக இயங்குகிறோம். ஆகவே மூளைகளும் ஒன்று சேர்ந்து பேசிக் கொள்கின்றன – அதுவும் ரகசியமாக என்கிறார் பேராசிரியர்.

ஒரு மூளை இன்னொரு மூளையிடம் எவ்வளவு சக்தியை உபயோகிக்கிறாய், எப்படிப் பெற்றுக் கொள்கிறாய் என்று கேட்டுக் கொள்கிறது. ஒவ்வொன்றும் தனித்தனி வரவு செலவுத் திட்டம் தயாரித்துக் கொள்கிறது. எல்லாம் நம்மை வாழ வைப்பதற்காக.

பேசும் மொழிக்கு வருவோம். எடுத்துக் காட்டாக, குழந்தையை அன்போடு அரவணைத்துப் பேசுவதால் பிற்காலத்தில் அது நலத்தோடும் மனநிறைவோடும் வாழ அந்த செயல் உதவுகிறது.

ஒரு உடலுக்குப் பொருந்தும் தகவல்கள் இன்னொரு உடலுக்கு ஒத்துப் போகாத நிலைமைகளும் உண்டு.

ஒரு நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்று யாராவது சொன்னால் உடனே கவலை வந்துவிடுகிறது. சொந்த பந்தங்கள் யாராவது இறந்து போய்விட்ட செய்தி கேட்டால் சொல்லவே தேவையில்லை.

உடல் மொழியும் அதே. அதே. யாராவது ஒரு (இளம்) பெண் ஒரு ஆணைப் பார்த்து ஒரு பார்வையை வீசுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆணின் நிலை எப்படி இருக்கும்? விவரிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, அதே பெண் புருவங்களை உயர்த்திக் கடுமையாகப் பார்த்தால்?

ஆகவே தகவல்கள் நம் உடல் வரவு செலவுத் திட்டத்தை, அதாவது உடல்நிலையை உயர்த்தலாம் அல்லது பாதிக்கலாம்.

நியூரான்கள் எதற்காக நம்மை இப்படிக் குழப்பங்களில் மாட்டி விட வேண்டும்? இன்னும் ஆய்வுகள் தேவை என்கிறார் அவர்.

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி

பாலித் தீவு மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் இலங்கோட் மக்களுக்குப் பயம் வந்துவிட்டால் உடனே தூங்க வேண்டும் என்று அவதிப்படுகிறார்கள் .

புன்னகை செய்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று அமெரிக்கர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். நமீபியா நாட்டின் ஹிம்பா இன மக்களோ எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இப்படி நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் பண்பாடு வேறுபடுகிறது.

ஒரே ஒரு விதமான ஒரு மனித மூளை என்று ஏதுமில்லை. ஒவ்வொரு மூளையும் ஒவ்வொரு ரகம்.

நாம் பிறக்கும்போது இருக்கும் நம் மனம் எதுவுமே எழுதப்படாத நோட்டுப் புத்தகம் போலிருக்கும் என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். இன்னொரு கதை : மனிதர்களுக்கே மட்டுமே இருக்கக்கூடிய இயல்பான குணாதிசயங்களோடு தான் எல்லா மனிதக் குழந்தைகளும் பிறக்கின்றன. இந்த இரண்டையும் மறுக்கிறார் பேராசிரியர்.

அவர் முன்வைக்கும் மூன்றாவது கருத்து : ஒரு குழந்தை பிறக்கும்போது ஒரு அடிப்படைக் கட்டமைப்பு கொண்ட மூளையுடன் இந்த உலகத்துக்கு வருகிறது. (அதை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். புதிய அம்சங்களை சேர்த்துக் கொள்ளலாம். மெருகூட்டலாம்.)

பிறகு எந்தச் சூழலில் அது வாழ்கிறதோ அதற்கு ஏற்றது போலத் தன் கட்டமைப்பை மாற்றி அதில் தன்னைப் பொருத்திக் கொள்கிறது. அதனால் தான் மூளை எந்த மாறுபட்ட பண்பாட்டுச் சூழலிலும் நின்று பிடிக்கிறது. தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அமைப்பாக இருந்தால் அது எப்போதோ அழிந்து போயிருக்கும். மனித குலமே இருந்திருக்காது. எல்லாரும் ஒரே மனது உள்ளவர்களாக இருந்தால் நாம் இங்கிருக்க வாய்ப்பில்லை.

படிநிலை வளர்ச்சிக் கோட்பாட்டின் தந்தை டார்வின் கூட இந்தக் கொள்கையை ஆதரித்தவர் என்கிறார் பேராசிரியர்.

நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். வெவ்வேறு மூளைகள் கொண்டவர்கள்.

சமூகம் என்னும் கற்பனையை உருவாக்குவதே மூளை தான். உண்மை எது? அது சொல்வதை உண்மை என்று நம்புகிறோம். அதன் சிக்கலான வடிவமைப்பில் கற்பனை உருவகங்களைப் படைக்கிறோம். அதை அறிவு என்று நம்புகிறோம்.

மற்ற உயிரினங்களின் மூளைகளும் ஓரளவு இதையே தான் செய்கின்றன. ஆனால் வேறுபாடு என்னவென்றால் இருக்கிற செயல்பாடுகள் போதாது என்று மனித குலம் புதுசு புதுசாக கொண்டு வந்து இறக்கிக் கொண்டே இருக்கிறது.

மனித மூளை சிந்தனைகளின் சுரங்கம். அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. சிந்தனைகளை அதுவே உருவாக்குகிறது. பிறகு அதை அப்படியே நம்புகிறது. சிலசமயங்களில் இந்த அபூர்வ சிந்தாமணியின் சில ஐடியாக்கள் திசை மாறிப்போய் ஒரு சமூகத்தையே அதல பாதாளத்துக்குத் தள்ளிவிடலாம். எச்சரிக்கையாய் இருங்கள் என்கிறார் அவர்.

சில உதாரணங்கள் : ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும். பெண் குழந்தையை விட ஆண் குழந்தை நல்லது. நம் இனம் மட்டும் தான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இனம். மற்றவர்கள் அல்ல. டைனோசர் இனம் வாழ்ந்ததே இல்லை….

பேராசிரியர் வெறும் ஆய்வு முடிவுகளோடு மட்டும் நிற்கவில்லை. அறிவுரைகளும் தருகிறார். மனக்கலக்கம், வெறுப்புணர்வுகளைக் களைவது எப்படி? இன்றைய எந்திரத் தனமான வாழ்வில் நிதானம் இழந்து விடாமல் மகிழ்வு, அமைதியோடு வாழ்வது எப்படி என்று … பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகளையும் தருகிறார்.

ஏட்டில் இருந்து சில செய்திகள் மட்டுமே இங்கே வருகின்றன. அறிவியல் குறிப்புகளும் வியப்புகளும் கலந்த தொகுப்பு.

Thanks for your comment!